Saturday, September 03, 2005

சுழன்று எரிகிறது உன்பெயர்.

மாவீரனே!
உரமேறிக் கறுத்த
பனையின் காலாய்
ஊன்றி நிற்கிறது
உன் மரணம்.

இழந்த உடலிலிருந்து
சிறகடித்து வந்து
எங்கள்
இதயத்தில் உட்கார்ந்திருக்கிறது
உன் பெயர்.

நாங்கள்
ஒவ்வொருவராய்
சொல்லச் சொல்ல
உன் ஒற்றைப்பெயர்
இலட்சம் பெயராகிறது.

உனக்காக
ஏற்றி வைக்கப்பட்ட
தீபத்தின் நாக்கு
காற்றின் குரலெடுத்து
சுழற்றிச் சுழற்றி
சொல்கிறது உன் பெயரை.

உன் பெயர்
தெறித்து விழுகிறது
எங்கள் விளக்குகளிலும்
எதிரிகளின் உடல்களிலும்.

நீ இல்லாமல் போனாலும்
உம் பெயரில்லாமல்
எதுவும் இல்லை இங்கு.

பழநிபாரதி.

நன்றி- மண் -தை.2002
(கவிஞர் அறிவுமதியால் நடத்தப்படும் சஞ்சிகை.)

Comments on "சுழன்று எரிகிறது உன்பெயர்."

 

said ... (September 04, 2005 8:26 PM) : 

Nalla kavithai

 

post a comment