Thursday, November 24, 2005

வான் பாய்கிறது இரணைமடு

வன்னியின் மிகப்பெரிய குளம் இரணைமடு. இப்போது அங்குப்பெய்யும் கடும் மழையால் அக்குளம் நிரம்பிவிட்டது. கடந்த இருநாட்களாக அக்குளம் வான்பாய்ந்துகொண்டிருக்கிறது. அத்துடன் அக்குளத்தின் கதவுகள் திறக்கப்பட்டு பெருமளவு நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இனி அதுகுறித்தான செய்திகளுடன் படங்களும்.
______________________

கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து நொடிக்கு 13,150 கன அடிநீர் வெளியேறிக் கொண்டிருப்பதாக நீர்பாசனத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
பல வருடங்களின் பின் இரணைமடுக்குளம் வான் பாய்வதும் குறிப்பிடத்தக்கது.
இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. நேற்றுப் பிற்பகல் இரண்டு மணிவரை 34 அடி 9 ½ அங்குலம் நீர் நிறைந்துள்ளது.

குளத்தின் இடதுகரை வான்கதவுகள் ஐந்தும் நான்கு அடியும், வலதுகரை வான்கதவுகள் முழுமையாகவும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ½ அங்குலம் வான்பாய்ந்து கொண்டிருக்கின்றது. வான்கதவுகள் பதினொன்றினூடாகவும் அதைவிட வான்பாய்வதன் மூலமும் நொடிக்கு 13,150 கன அடிநீர் வெளியேறிக் கொண்டிருக்கின்றது.




படங்களும் செய்தியும்: புதினம்.

Comments on "வான் பாய்கிறது இரணைமடு"

 

said ... (November 24, 2005 3:16 AM) : 

vanpaykirathendal enna?

 

said ... (November 24, 2005 8:18 AM) : 

//சினேகிதி said...
vanpaykirathendal enna? //

அது தான் எனது கேள்வியும் வான்பாய்வது என்றால் என்ன?
இந்தச் சொல் நான் கேள்விப்பட்டதே கிடையாது..!
வழமையாக பொங்கி வழிகிறது, பேருக்கெடுத்து ஓடுகின்றது , நிறம்பி வழிகின்றது அப்பிடித்தான் அறிந்தது உண்டு! சில வேளைகளில் வட்டார மொழியாக இருக்கலாம் அல்லது பழந்தமிழாக இருக்கலாம்!
கட்டுரையின் படி வான்பாய்வது= வெளியேற்றபடுகின்றது என்றே எனக்கு பொருள் படுகின்றது! யாராவது தமிழ் பண்டிதர்கள்/புலவர்கள் விளங்கப் படடுத்தினால் நன்று!

 

said ... (November 24, 2005 8:25 AM) : 

ஆ..சொலல மறந்து விட்டேன்
வான்=வின், ஆகாயம், வாணம் பரந்த இடத்தைக் குறிக்கின்றது
பாய்வது= தாண்டுவது, குதிப்பது,கடப்பது, எல்லை மீறுவதை குறிக்கிறது..!!!!

 

said ... (November 24, 2005 8:50 AM) : 

'வான்'என்பதற்குப் பல சொற்களும் அர்தமும் உண்டு.அதிலொன்று 'மழை' என்றும் பொருளாகிறது.எனவே மழை பொழிந்து கண்மாய் நிறையுங்கால் கரைதாண்டக் கடவது'வான் பாய்தல்'என்ப!முகிலுக்கும் சுட்டும் 'வான்'அது பொழிவுக்குத் தன்னை அர்ப்பணிக்க அதுவே மழையெனுங் பொருளைப் பகர்வதென்றறிக!பாய்தலாகிப் படர்வதென்பது நீருக்கும் தாவரத்தக்கும் பொருந்தக் கூறும் இயக்கச் சுட்டு.அஃதுமட்டுமின்றி அனைத்தும் அந்தப் பாய்வில் 'பொதிந்து'பொருள்படப் 'பாய்வது'உந்துதல் கண்டு பொருள்பட்ட இடமே சக்தி.

 

said ... (November 24, 2005 2:07 PM) : 

வான்பாய்வது :-?

 

said ... (November 24, 2005 8:44 PM) : 

பிந்திய பதிலுக்கு மன்னிக்கவும்.
வான் பாய்தலைக் "கலிங்கு பாய்தல்" என்றும் சொல்வதுண்டு. ஏற்கெனவே முந்திய படமொன்றில் பொடிச்சியும் இதுபற்றிக்குறிப்பிட்டுள்ளார்.

வான் பாய்தல் என்பது நீர் திறந்துவிடப்படுவதில்லை. குளத்தில் ஓரளவுவரையே நீர் சேகரிக்க முடியும். அந்த மட்டத்திற்கு நீர் வந்ததும், தானாகவே வழியத்தொடங்கும். கதவுகள் ஏதும் திறக்கப்படாமலேயே குளம் நிரம்பி நீர் வெளியேறும். சிலநேரங்களில் குளத்துக்கான நீர் வரத்து அதிகமாயிருந்தால் 3 அல்லது 4 அங்குல அளவில் நீர் வெளியேறும்.

குளத்தில் முழுமையான அளவு நீரைத்தேக்கி வைப்பது ஆபத்து என்று உணர்ந்தால்தான் அக்குளத்தின் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படும்.

எடுத்துக்காட்டாக,34 அடி நீர் சேகரிக்கமுடியுமென்றாலும்கூட 32 அடிதான் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் கருதினால் அந்த மேலதிக 2 அடி நீரையும் கதவுகளைத்திறந்தே வெளியேற்ற முடியும். 34 அடியைவிடக்கூடுதலாக நிறையும் நீர்தான் கதவுகள் திறக்காமல் வெளியேறும் நீர். அதுதான் வான்பாய்தல் அல்லது கலிங்குபாய்தல்.

நிற்க, மேலே அநாமதேயமாக வந்து விளக்கமளித்தவர் யாரென்று தெரியவில்லை. இராம.கி. போன்றோர் இச்சொல் விளக்கத்தை எழுதலாம். மேலும் மேற்கண்டவர் சொன்னதுபோல தாண்டுதல், மேவுதல் என்ற கருத்தில்தான் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

 

said ... (November 25, 2005 2:20 AM) : 

ம்.
இம்முறை கடும் மழையால் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வன்னியில் இடம்பெயர்ந்திருக்கிறார்களாம்.
வான் பாய்தலை விளங்கப்படுத்தியதுக்கு நன்றி.

 

said ... (November 25, 2005 2:44 AM) : 

//கலிங்கு பாய்தல்//

இதை எங்கள் ஊரில் கலுங்கு தட்டி மறுகால் ஓடுதுன்னு சொல்லுவாங்க

என்றும் அன்பகலா

 

said ... (February 22, 2006 9:25 PM) : 

யாரப்பா அது,
'என்றும் அன்பகலா' என்றுவிட்டுப் போய்விட்டீர்களே?
அந்த அன்புள்ளத்தைத் தேடியலைந்து களைத்துவிட்டேன்.

 

said ... (February 23, 2006 3:15 AM) : 

வசந்தன், பொதுவாக வான்பாய்வது என்பது அடங்காமல் பாய்வதைக் குறிக்கும். தரைக்கும் வானத்துக்கும் குதிக்கிறான் என்றும் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். தண்ணீர் அடங்காமல் பாய்வதைத்தான் வான் பாய்வது என்று குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

அன்பகலா என்பதை அன்ப கலா என்று பிரித்துக் கொள்ளுங்களேன். :-)

 

said ... (February 23, 2006 4:52 PM) : 

இராவகன்,
பின்னூட்டத்துக்கு நன்றி.
'வான்' என்தற்கு இன்னும் விரிவாக ஏதாவது எதிர்பார்க்கிறேன்.
நீர் நிரம்பி மேவிப் பாய்வதை 'வான் பாய்தல்' என்பதுபோல், நீரைத் திறந்து விடும் கதவையும் 'வான் கதவு' என்கிறோம்.

வன்னியில் பேச்சுவழக்கிலும் எழுத்து வழக்கிலும் 'வான்' என்ற சொல்லுக்கூடாக இவை குறிப்பிடப்படுவது அதிகமென்பதால் பழக்கத்தில் நானும் 'வான்' என்ற சொல்லையே பாவிக்கிறேன்.
கலிங்கு, கலிங்கு பாய்தல் என்ற சொற்பயன்பாடுமுண்டு. (கலிங்குக் கதவு என்று நான் கேள்விப்படவில்லை. நேரடியாகவே கலிங்கு திறத்தல் என்றால் கதவு திறத்தல் என்ற பொருளில் பாவிக்கப்படுகிறது).
இலங்கைப் பாடப்புத்தகங்களிலும் 'கலிங்கு' என்ற சொல்லே பாவிக்கப்படுகிறது.
********************
'அன்பு கலா' என்று இருந்திருந்தாலாவது பரவாயில்லையே.

 

post a comment