Monday, September 19, 2005

முத்தையன்கட்டுக்குளம்.

இது நான் வன்னியில் அதிகம் நேசித்த முத்தையன்கட்டுக்குளம்.
முதற்படத்தில் நீங்கள் பார்ப்பது அதன் அணைக்கட்டு. குளத்தின் நீர்ப்பரப்பின் நீளப்பாட்டுத் தோற்றம் படத்தில் தெரியவில்லை. மிகவிசாலமான நீர்ப்பரப்பைக் கொண்டது இக்குளம்.



இரண்டாவது படத்தில் தெரிவது குளத்தின் வான்பாயும் கதவுகள். வான்பாயும் நேரத்தில் அணைக்கட்டுக்கும் மேலாக நல்ல உயரத்துக்கு நீர்த்துவாலைகள் எழும்பும். அக்கம்பக்கத்தில் மழைத்தூவானத்துள் நின்ற உணர்வைத்தரும். நீண்டதூரத்திலீருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு புகார்வடிவில் தெரியும்.

குளம் வான்பாய்கிறதென்றால் சுற்றுலா செல்வதுபோல மக்கள் சென்று பார்ப்பார்கள். வன்னியில் இரணைமடுக்குளமும் முத்தையன்கட்டுக்குளமும் வான்பாய்தலைப் பார்க்கப்போவதற்குப் பிரபலமானவை.


ஆனால் மிகப்பெறுமதியான இக்குளத்தின் கதவுகள் திருத்தப்படாததால் பெருமளவான நீர் எந்நேரமும் வெளியேறிக்கொண்டிருக்கும். அக்குளத்தின் அணைக்கட்டால் போய்வரும்போது மிகக் கவலையளிக்கும். ஒருநாளைக்கு மட்டும் இரண்டு லட்சம் லீற்றர் நீர் இக்குளத்திலிருந்து அநியாயமாக வெளியேறுவதாகக் கணக்கிடப்பட்டதுண்டு. அனால் நீருக்குப் பெருமளவு தட்டுப்பாடு நிலவாததால் இப்பிரச்சினை பெரிதாகத் தெரியவில்லைப் போலும். இதற்கு முக்கியகாரணம், பயிர்ச்செய்கை முழு அளவில் செய்யப்படாததே. இன்றும் இக்குளத்தின்கீழ் செய்கைபண்ணப்பட வேண்டிய நீறைய பிரதேசங்கள் செய்கைபண்ணப்படுவதில்லை.


இது வான்பாயும் நீர் விழுந்துஓடும் இடம். இப்போது படத்தில் தெரியும் நீர், தேங்கிநிற்கும் நீரன்று. மாறாக சேதமடைந்த கதவுகளுக்குள்ளால் வெளியேறி வீணாய்ப்போகும் நீர்.

Comments on "முத்தையன்கட்டுக்குளம்."

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (September 19, 2005 11:46 AM) : 

அட, தமிழ்மணத்திரட்டியில வரமுதல், விளம்பரம் வந்திட்டுது.

 

Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said ... (September 19, 2005 12:53 PM) : 

//see my site about Construction Lighting//

ஓரளவு பொருத்தமாய்த்தான் வந்திருக்கு விளம்பரமும். :O)

நீர் வீணாகுவது என்பது மிகவும் கவலைக்குரியது.

 

Anonymous Anonymous said ... (September 19, 2005 10:54 PM) : 

நல்ல படங்கள்.
நல்ல விளக்கங்கள்.

 

Blogger ஒரு பொடிச்சி said ... (September 21, 2005 10:03 AM) : 

நீங்கள் வன்னி சார்ந்த படங்களைப் போடுகிறபோது சார்ந்த ஊரின் காட்சிகள் வந்து போகிறது. இந்தப் படங்களுக்கும் உங்கள் நண்பர் கருணா எடுக்கிற படங்களுக்குமான வித்தியாசம் திருக்கோணமலை நிலாவெளிக் கடற்கரையை சுற்றலாப் பயணிகளுக்காக எடுப்பதற்கும் அங்கு வாழ்கிற ஒருவரது மனப்பிரதிக்குமான வித்தியாசம போல என நினைக்கிறேன்..

இந்த வான்பாய்தல் என்றதை நாங்கள் 'கலிங்கு' பாய்தல் என்போம். வன்னியில் இதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இந்த பதிவுகளை படத்திற்கான தனியே விளக்காமாயில்லாமல் அது இல்லாமலும் படிக்கக்கூடியமாதிரி விரிவாய் எழுதினால் நல்லா இருக்கும்!

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (September 21, 2005 10:23 AM) : 

பொடிச்சி,
கலிங்கு பாய்தல் எண்டுறதும் பாவிக்கிறதுதான். ரெண்டு சொல்லுமே ஒரேயளவில பாவிக்கிற சொல்லுகள்தான். கலிங்கு பாயிறதெண்டது பேச்சுவழக்கில அதிகமா இருக்கும். எழுத்துவடிவில (செய்திகளில) வான்பாயிறதெண்டுதான் இருக்கும்.

இப்பிடி இன்னும் பல படங்கள் இருக்கு. ஆனா இதுகள்தான் நானறிஞ்ச, நான் பழகின இடங்கள். அதாலதான் குறிப்பிட்ட சிலதுகள மட்டும் போட்டு எழுதிறன்.


கருணா எடுக்கிற படத்துக்கும் இந்தப்படங்களுக்குமான வித்தியாசம் பற்றின விளக்கம் நல்லாயிருக்கு.

 

post a comment